இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 நவம்பர், 2024

அண்மைய நூல் - சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)

 அண்மைய நூல் - சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் (மூலமும் உரையும்)

சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் மூலமும் உரையும் என்னும் எம் அண்மைய நூலின் முன்னுரையில் இருந்து சில குறிப்புக்கள்:

சங்க இலக்கியப் பதிப்புக்களில் புலவர் / திணை ஆகியவற்றில் இருந்து மாறுபட்டுப் பொருண்மை / கருத்தியல் அடிப்படையில் அதாவது, முருகன் பற்றிய பாடல்கள் என்னுமாப்போலப் பதிப்புக்கள் எவையும் வந்துள்ளதாகத் தெரியவில்லை. அவ்வகையில் இப்பதிப்பே முதற்பதிப்பாகும் என்பதே இப்பதிப்பின் தகைமையாகும். இதற்கு முன்னர் இதுபோன்ற பதிப்பு ஒன்று சங்க இலக்கியத்திற்குத் தோன்றவில்லை என்னும்போதே இப்பதிப்பின் அருமையும் சிறப்புக்களும் தெளிவாகின்றன. இவ்வகையில் இப்பதிப்பு (சங்கத் தமிழ்: முருகன் பாடல்கள் மூலமும் உரையும்) தனக்கான இடத்தைத் தானே உருவாக்கிக் கொள்கின்றது. மேலும், இனியாகிலும் இதுபோன்ற பதிப்புக்கள் சங்க இலக்கியத்திற்கெனத் தோன்றுவதற்கான முதல் விதையையும் இப்பதிப்பு இடுகின்றது என்பது குறிக்கத்தக்கது.  

பதிப்பின் பயன்

சங்க இலக்கியங்களில் தான் முருகன் பாடல்கள் இருக்கின்றனவே?. அப்படி இருக்கும்பொழுது, இப்பதிப்பினால் என்ன பயன்? என்ற எண்ணமும் உங்களுக்கு எழலாம். சங்க இலக்கியங்களில் உள்ள 2381 பாடல்களில் ஆங்காங்கே முருகன் பற்றிய பாடல்கள் விரவிக் கிடக்கின்றன. பத்துப்பாட்டில் ஒன்றும், பரிபாடலில் சிலவும், பிற நூல்களில் சிலவும் என்று விரவிக் கிடக்கும்பொழுது, அவற்றை அறியத் தனித்தனி நூல்களைத் தேடி, அவற்றுள்ளும் முருகன் பற்றிய பாடல்களைத் தேடி அலைய வேண்டும். ஆனால், இப்பதிப்பு அவற்றையெல்லாம் ஒரு சேரத் தொகுத்து ஓரிடத்தில் காட்சிப்படுத்துகின்றது. அத்தோடு, அப்பாடல்களுக்கான சிறந்த உரைகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கின்றது. ஒவ்வொரு நூலுக்குமான சிறந்த உரைகளில் ஒன்றை உங்களுக்குத் தருகின்றது. இவையெல்லாம் ஓர் அடிப்படை ஆராய்ச்சி நூலின் பண்புகளாகும். இந்நூலும் ஓர் அடிப்படை ஆய்வு நூலாதலால் மேலாய்வுகளுக்கும் மீளாய்வுகளுக்கும் துணை செய்யும்

நூலின் முகப்புப் பக்கங்கள்





செவ்வாய், 1 அக்டோபர், 2024

இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

 இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

இணைய ஆய்விதழான இனம் பிப்ரவரி 2023 இதழில் சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரை இதோ.











வெள்ளி, 1 மார்ச், 2024

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 94

இலக்கியம் - திணை இலக்கியம் 


101. காதற்காலத்தில் வேப்பங்காய் இனிக்கும். திருமணத்தின்பின் பனிச்சுனைத் தண்ணீரும் வெந்நீராகும் என்ற வாழ்க்கை உண்மையைப் பாடிய புலவர்?

மிளைப் பெருங்கந்தன் (குறுந். 196ஆம் பாடல்).

102. காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கையைப் பாடலாக்கியவர்?

காக்கைபாடினியார் நச்செள்ளையார் (குறுந். 210ஆம் பாடல்).

103. திணைக்கு நூறாக 500 பாடல்களைக் கொண்ட தொகை நூல் எது?

ஐங்குறுநூறு.

104. பாடற்பொருண்மை அல்லது தொடரால் பாடலுக்குப் பெயர் பெற்றுள்ள தொகை நூல்கள் யாவை?

ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

105. ஐங்குறுநூற்றைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் யார்?

தொகுத்தவர் - புத்துறை முற்றிய கூடலூர்கிழார்

தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 93

 இலக்கியம் - திணை இலக்கியம்


96. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் சொல்லியவர்?

உகாய்க்குடிக்கிழார் (குறுந். 63ஆம் பாடல்).

97. கருந்தோட் கரவீரன் பாடிய மந்தியின் செயல் என்ன?

தன் துணை பிரிந்ததெனத் தன் குட்டியை உறவுகளிடம் சேர்த்துவிட்டுக் கைம்மையைப் பொறுக்காது மலையிலிருந்து குதித்து உயிர்விட்டது (குறுந்தொகை 68).

98. பொன்மலி பாடலியைப் பாடிய புலவர்?

படுமரத்து மோசிகீரனார் (குறுந். 75ஆம் பாடல்).

99. மாலை நேரத்தில் குஞ்சுகளுக்கு உணவு எடுத்துச்செல்லும் பறவையைப் பாடிய புலவர்?

தாமோதரன் (குறுந். 92ஆம் பாடல்).

100. ஆரியவரசன் யாழ்ப்பிரமத்தன் கூறிய வாழ்வியல் நீதி என்ன?

அறிந்த ஒரு உண்மையை மறைந்துச் சாட்சி சொல்லல் ன்றோர்க்கு இயல்பு இல்லை (குறுந். 184ஆம் பாடல்).


தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 92

இலக்கியம் - திணை இலக்கியம் 

91. ஆடிப்பாவையைத் தலைவனின் செயலுக்கு உவமை கூறிய புலவர் யார்?

ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை 9ஆம் பாடல்).

92. சிறுகோட்டுப் பெரும்பழத்தைக் காமத்திற்கு உவமை கூறியவர்?

கபிலர் (குறுந்தொகை 18ஆம் பாடல்).

93. நல்லான் தீம்பாலைத் தலைவியின் அழகுக்கு ஒப்பாகக் கூறியவர்?

வெள்ளிவீதியார் (குறுந்தொகை 27ஆம் பாடல்).

94. செம்புலப் பெயல்நீர் பற்றிய காதற்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

குறுந்தொகை (40ஆம் பாடல்).

95. கையில் மன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் பற்றிக் கூறும் பாடல்?

குறுந்தொகை 58ஆம் பாடல். பாடியவர்: வெள்ளிவீதியார்.

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 91

 இலக்கியம் - திணை இலக்கியம்

86. உ. வே. சா.வின் 50 ஆண்டுகால உழைப்பில் வெளிவந்த பழந்தமிழ் உரைப்பதிப்பு எது?

குறுந்தொகை உரைப்பதிப்பு (காலம்: 1887 - 1937).

87. குறுந்தொகையில் முதன்முதலாக உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றைப் பகுத்துக் காட்டியவர் யார்?

தி. செளரிப்பெருமாள் அரங்கன். உள்ளுறைப் பாடல்கள் 18. இறைச்சிப் பாடல்கள் 30.

88. குறுந்தொகையுள் மிக அதிகமான பாடவேறுபாடுகள் காட்டப்பெற்ற பாடல் எது?

உ.வே.சா. உரைப்படி குறுந். 99ஆம் பாடல் (13 பாடவேறுபாடுகள்). ரா. இராகவையங்கார் உரைப்படி குறுந். 256ஆம் பாடல் (27 பாடவேறுபாடுகள்).

89. பெண் கூந்தலின் மணத்தைப் பற்றிப் பாடிய குறுந்தொகைப் புலவர் யார்?

இறையனார் (குறுந்.2ஆம் பாடல்).

90. குறிஞ்சிப் பூத்தேனடைக்குத் தலைவனின் காதலை உவமை கூறும் சங்க நூல் எது?

குறுந்தொகை (3ஆம் பாடல்).

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 90

 இலக்கியம் - திணை இலக்கியம்

81. குறுந்தொகையை மேற்கோளாக எடுத்தாண்ட பழைய உரையாசிரியர்கள் எத்தனை பேர்?

29 என்பது உ.வே.சாமிநாதையர் கருத்து.

82. பழைய உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை?

235.

83. குறுந்தொகையில் மிகுதியான பாடவேறுபாடுகளைக் காட்டிய உரைகாரர் யார்?

ரா. இராகவையங்கார் (2960 பாடவேறுபாடுகள்).

84. குறுந்தொகைப் பாடல்களை மிகுதியான முறை மேற்கோள் காட்டிய பழைய உரைகாரர் யார்?

நச்சினார்க்கினியர் (208 இடங்கள்).

85. பழைய உரைகாரர்களால் மிக அதிகமா மேற்கோள் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல் எது?

14 உரைகாரர்களால் 16 முறை எடுத்துக்காட்டப்பட்ட பாடல் குறுந்தொகையின் 2ஆம் பாடல் (கொங்குதேர் வாழ்க்கை).

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 89

இலக்கியம் - திணை இலக்கியம்

76. குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களில் மிக அதிகமான பாடல்களைப் பாடிய புலவர் யார்?

கபிலர் (28 பாடல்கள்).

77. குறுந்தொகைப் பாடல்களுக்கு முதன்முதலில் திணை வகுத்து முதல் உரையும், முதல் பதிப்பும் செய்தவர் யார்?

திருக்கண்ணபுரத்தலத்துச் சௌரிப் பெருமாள் அரங்கன் (பதிப்பு வெளிவந்த ஆண்டு: 1915).

78. குறுந்தொகைப் பாடல்களின் அடியளவு என்ன?

4 அடிமுதல் 8 அடிவரை. (307,309 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளைக் கொண்டுள்ளன).

79. குறுந்தொகைக்குப் பழங்காலத்தில் உரை எழுதியோர் யார்?

பேராசிரியர் (380 பாடல்கள்), நச்சினார்க்கினியர் (20 பாடல்கள்). இவ்வுரைகள் கிடைக்கவில்லை என்பர்.

80. குறுந்தொகைப் பாடல்களுள் யாருடைய கூற்றாக அமைந்த பாடல்கள் மிகுதியானவை?

தலைவி கூற்று (180 பாடல்கள்).

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...