சனி, 23 ஆகஸ்ட், 2025

நெய்வேலி புத்தகக் கண்காட்சி - சிறந்த எழுத்தாளர் விருது (12.07.2025)

 நெய்வேலி புத்தகக் கண்காட்சி - சிறந்த எழுத்தாளர் விருது (12.07.2025)


ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வடதமிழகத்தின் இன்றியமையா அறிவுத் திருக்காட்சி. 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருவதும், அதில் ஆண்டுதோறும் எழுத்தாளர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுவதும் பாராட்டுதலுக்குரிய. அவ்வகையில் 24ஆம் ஆண்டுப் புத்தகக் கண்காட்சியில் 12.07.2025 (சனிக்கிழமை) அன்று சிறந்த எழுத்தாளர் பரிசுத்தொகை ரூ 15000 மற்றும் கேடயம் ஆகியன எனக்கு வழங்கப்பட்டன. 

பொதுவாகஅரசு நிறுவனங்கள் தமக்குச் சமூக அக்கறை உண்டெனக் காட்டிக்கொள்ள விழாக்கள் நடத்துவதுண்டு. ஆனால், நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் அமைப்பும் உண்மையான சமூக அக்கறையோடு, அறிவுப் பரவலே சமூக நலம் என்ற உயரிய நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்   புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருவது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அதற்காக என் வணக்கமும் நன்றியறிதலும் நிறுவனத்திற்கு என்றும் உரியன. அறிவைப் போற்றாத சமூகம் முன்னேற்றம் காண்பது அரிது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அதை  உணர்ந்து, புத்தக விழாக்களின் மையமாகிய எழுத்தாளர்களைப் போற்றி விருது வழங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நன்றி கூற  வார்த்தைகள் இல.

இந்தியக் குடியரசுத் தலைவர் விருது முதல் மாநில அரசுகளின் விருது விழாக்கள் வரை பலவற்றில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். பல விழாக்களில் நாம் வந்தோமா? இல்லையா? என்பதைக் கூட அறியாமல் விழா நடத்துவோர் உண்டு என்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், நெய்வேலி நிறுவனம் நிகழ்த்திய புத்தகத் திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அன்பும் அக்கறையுமான எத்தனை அழைப்புக்கள். இங்கு வந்து சாப்பிடுக! என எத்தனை அக்கறையான சொற்கள். ஆகா. உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போனேன். குறிப்பாக, நூலகப் பொறுப்பாளர் தகைமிகு. அரவிந்த் பாபு ஐயா அவர்கள் தேர்ந்தெடுத்தது முதல் நிகழ்ச்சி நிறைவு வரை மிக அக்கறையோடு, மனம் நிறைந்த அன்போடு கவனித்துக் கொண்டார். அவர்தம் அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றி மலர்கள். இவர்களைப் போன்ற பெருமக்களே தங்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் பெருமை சேர்ப்பவர்கள். நெய்வேலி புத்தகத் திருவிழா என்றும் நெஞ்சில் நிறைந்த விழாவாக உறைந்திருக்கின்றது. புத்தகக் காட்சி விருது விழாப் படங்களும் காணொலிக் காட்சியும்.





















செவ்வாய், 20 மே, 2025

ஐந்தமிழ் மன்ற ஆய்வுக் கருத்தரங்கு - காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகம் - 16,17.05.2025

 ஐந்தமிழ் மன்ற ஆய்வுக் கருத்தரங்கு - காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகம் - 16,17.05.2025

மதுரை, ஐந்தமிழ் மன்றத்தின் இருபதாவது கருத்தரங்கு 16,17.05.2025 (வெள்ளி, சனி) ஆகிய நாள்களில் காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. எம் பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் வழிகாட்டுதலால், முதன்முறையாக ஐந்தமிழ் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரை, காந்தி அருங்காட்சியக நூலகர் தகைமிகு. இரவிச்சந்திரன் அவர்கள் உதவினார். 

இரு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் 17.05.2025 சனிக்கிழமையன்று கலந்துகொண்டேன். பிற்பகலில் நண்பர் முனைவர் மு. அப்துல் காதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் திருக்குறளின் முதல் சொல்லடைவு எது? என்னும் தலைப்பில் கட்டுரை படித்தேன். 

கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் கண்ணா கருப்பையா, முனைவர் கருணாகரன், முனைவர் சிதம்பரம், முனைவர் சிவா, முனைவர் ச.பொ. சீனிவாசன் மற்றும் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. மகிழ்ச்சி. கட்டுரை இதோ:

















படங்கள் இவை (பேராசிரியர் முனைவர் கி. சிவா அவர்களுக்கு நன்றி)



கட்டுரையின் படப்படி இது:







புதன், 2 ஏப்ரல், 2025

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத்திருவிழா 2025 - தினமலர் நாளிதழ்ச் செய்தி (24.03.2025)

 பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத்திருவிழா 2025 - தினமலர் நாளிதழ்ச் செய்தி (24.03.2025)

புதுவை, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் கடந்த 21.03.2025 வெள்ளிக்கிழமை முற்பகல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழா பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் 24.03.2025 அன்று வெளிவந்தது. தினமலர் நாளிதழுக்கும், நண்பர் திரு. முனுசாமி அவர்களுக்கும் நன்றி. அது இதோ:








வெள்ளி, 21 மார்ச், 2025

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் மரபு உணவுத் திருவிழா (21.03.2025)

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவும் இணைந்து  இன்று (21.03.2025) வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் தமிழ் மரபு உணவுத் திருவிழா - 2025 ஐக் கல்லூரி வளாகத்தில் நடத்தின. 

புதுவை மாநிலத்தில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட கல்லூரியாகவும், முதல் பெண்கள் கல்லூரியாகவும் விளங்கும் பாரதிதாசன் கல்லூரித் தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு பயிலும் மாணவியர் செம்மொழி இலக்கியங்களை இரு பருவங்களுக்குப் பாடங்களாகப் படிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களாகிய சங்கத் தமிழ் இலக்கியங்களில் பழந்தமிழர்களின் வாழ்வியலும் அரசியலும் சமூகவியலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டைத் தமிழர்களின் உணவுகளையும், உணவு தயாரிக்கும் முறைகளையும் படிக்கும் மாணவியருக்கும், பிறருக்கும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் தெளிவும் ஏற்படும் வகையில் தமிழ்த்துறை சார்பாகக் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் தமிழ் மரபு உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.   

இன்று (21.03.25) காலை நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் கலந்துகொண்டு, தமிழ் மரபு உணவுக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துத் தலைமை தாங்கி உரையாற்றினார். அவர் பேசும்போது, மாறிவரும் உணவுப் பண்பாட்டுச் சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்றியமையாதவை. நம்முடைய மரபும் உணவும், உணவின் பின் நிற்கின்ற அறிவியலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்வதென்றால், சிறு தானிய உனவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை குளுக்கோஸ் என்ற சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரெனக் அதிகரிப்பது தடுக்கப்படும். செரிமானமும் மெதுவாக நடைபெறும் என்று கூறினார்.  

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி உணவுத் திருவிழாவின் நோக்கங்களை எடுத்துக் கூறினார். கல்லூரித் தர உறுதியளிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.எஸ். சுரேஷ் கருத்துரை வழங்கினார்.

கவிஞரும், தன்முன்னேற்ற ஊக்கப் பேச்சாளரும், சாதனைப் பெண்ணாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மரபு உணவுகளின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியவருமாகிய திருமதி. சுஜாதா சரவணன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, மரபு உணவின் சிறப்புக்களை எடுத்துக் கூறியதோடு, இவ்வகை நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக, தமிழ் மரபு உணவுத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. மணி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழி நன்றியுரை கூறினார். இளங்கலைத் தமிழ் முதலாண்டு மாணவி .விக்னேஸ்வரி  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஊன்துவை அடிசில் (பிரியாணி), கருப்பு இட்லி, புதுச்சேரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சியில் மாணவிகளால் வைக்கப்பட்டிருந்தனஇந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பஅமிர்தவள்ளி, முனைவர் ஆ. கோமதி, முனைவர் இரா. குமுதவள்ளி, முனைவர் மா.தயாநிதி உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். பல்துறைகளைச் சார்ந்த மாணவிகள் திரளாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

  

கல்லூரி முதல்வர் அறையில்

கல்லூரி முதல்வர் அறையில்
கல்லூரி முதல்வர் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்

பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
பேராசிரியர்கள் கண்காட்சியைப் பார்வையிடல்
வரவேற்புரை: முனைவர் ஆ. மணி
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ. சேதுபதி கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்
அரங்கச் சுவைஞர்
முதலாண்டு மாணவி ப. விக்னேஸ்வரி அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்புரை

கல்லூரி முதல்வர் முனைவர் ரா. வீரமோகன் அவர்களின் தலைமையுரை

தமிழ்த்துறைத் தலைவர் சொ. சேதுபதி அவர்களின் நோக்கவுரை

சிறப்பு விருந்தினர் கவிஞர், தன்முன்னேற்றப் பேச்சாளர் திருமதி. சுஜாதா சரவணன் அவர்களின் வாழ்த்துரை
இரண்டாமாண்டு மாணவி பு. அருள்மொழியின் நன்றியுரை

கண்காட்சியில் சில உணவுப் பொருட்கள்:









சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...