புதன், 1 நவம்பர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 35) - ஞாழல், ஞெமை, தடா, தாமரை, தாழை

 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 35) - ஞாழல், ஞெமை, தடா, தாமரை, தாழை

ஞாழல்


    இது நெய்தல் நிலத்துக்குரிய மரம்; கடற்கரை ஓரத்தில் வளர்வதாதலின் இதன் வேரில் நண்டுகள் வளை அமைத்து வாழும். புன்னையும் இம்மரமும் சேர்த்துக் கூறப்படும். இதன் மலர் சிறிய வடிவினது. அது வெண்சிறு கடுகையும் ஆரன்மீன் முட்டையையும் போலத் தோற்றும். அம்மலர் தண்ணிய நறுமணம் உடையது.
ஞெமை

      பாலை நிலத்துக்குரிய மரங்களுள் ஒன்று. இம் மரத்தின்மேல் ஆண்பருந்து தன் பெடையோடு சேர்ந்து இன்புற்றிருக்கும் செய்தி ஒரு செய்யுளில் காணப்படும்.
 
தடா

    இது தடவெனவும் வழங்கும். பெரும்பாலும் குறிஞ்சி நிலத்தில் காணப்படும். இம் மரத்தின்கண் அன்றில் கூடுகட்டி வாழும். இது மிக உயர்ந்து வளர்வது.
 
தாமரை

     இக்கொடி மருத நிலத்துக்குரியது. காலையில் மலர்ந்து மாலையில் குவிந்த இதன் மலருள் சிறு வெம்மை இருக்கும்; தலைவியின் மேனி வெம்மைக்கு அவ்வெம்மையை ஒப்பிடுவர். செந்தாமரை மலரை முருகக் கடவுளின் திருவடிக்கும், வெண்தாமரை முகையைக் கொக்கிற்கும், தாமரைத் தாதைத் தேமலுக்கும் புலவர்கள் ஒப்பிடுவர்.
 
தாழை

    கண்டல், கைதை என்னும் பெயர்களால் தாழை வழங்கப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரியது இது; கடற்கரையிலும் கழியின் ஓரத்திலும் வளரும். கழியில் வெள்ளம் மிகும்போது மேலே தோன்றியும் குறையும்போது தாழ்ந்தும் விளங்கும். இத்தாழையைத் தலைவி ஒரு பாற்படாத தன் நெஞ்சிற்கு உவமையாகக் கூறிக் கொள்ளுகின்றாள். இதன் வேரில் வளை அமைத்து நண்டுகள் வாழும். இதற்கு விழுது உண்டு. இதன் முள்ளிலையின் தோற்றம் வாளரத்தையும் மலரின் தோற்றம் கொக்கையும் ஒக்கும். தாழையின் வரிசை வேலை நட்டு வைத்த வேலியைப் போலத் தோற்றும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...