திங்கள், 2 நவம்பர், 2015

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 9) சிறுபொழுதுகள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 9) சிறுபொழுதுகள்

 சிறுபொழுதுகள்
            சிறு பொழுதுகள் ஐந்தென்றும் ஆறென்றும் இரு வகைக் கொள்கைகள் உண்டு.
காலையும் பகலுங் கையறு மாலையும்
 ஊர்துஞ்சி யாமமும் விடியலு மென்றிப் பொழுது”     (குறுந். 32)
என்னும் பாட்டில் ஐவகைச் சிறுபொழுதுகள் சொல்லப்படுகின்றன. காலைப் பொழுது புலர்ந்த பின்னுள்ள காலம் என்றும், பகல் நண்பகலை உள்ளிட்ட காலம் என்றும், மாலை சூரியன் மறைந்தது தொடங்கிய இரவின் முதல் யாமம் என்றும், யாமம் இடையிரவென்றும், விடியல் இரவின் கடைசி யாமம் என்றும் கொள்ள வேண்டும். இவற்றின் இடையே எற்பாடென்னும் பொழுதொன்றையும் கூட்டி ஆறாக உரைப்பர் வேறு சிலர்.
 மாலை
இச்சிறு பொழுதுகளில் மாலையைப் பற்றியே புலவர்கள் பெரிதும் புனைந்து கூறுகின்றனர். சூரியன் மறைந்த பின்னர் வானம் செந்நிறத்தை அடைகின்றது. நெடு வெண்ணிலவும் உடுக்களும் தோன்றுகின்றன.
ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் கூம்புகின்றன; முல்லை, பகன்றை முதலியன மலர்கின்றன. கடலும், கானலும் பொலிவிழந்து தனிமைக்கோலத்தோடு தோன்றுகின்றன. தொழில் மேற்சென்றார் தத்தம் தொழிலினின்றும் நீங்கி வீட்டுக்கு வருகின்றனர். விதைக்கும் பொருட்டுக் காலையில் சென்ற உழவர் விதை கொண்டு சென்ற வட்டி நிறைய மலரைப் பறித்து வைத்து மீளுகின்றனர். பசுக்களை வீட்டிற்கு ஓட்டி வரும் இடையன் வழியில் மலர்ந்த முல்லைப் பூவைப் பறித்துச் சூடி வருகின்றான். அந்த முல்லையின் மணமும் பொலிவும் மாலைக் காலத்தை விளக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
            பறவைகள் தத்தம் குஞ்சுகளுக்குரிய இரையை வாயில் கவ்விக் கொண்டு தாம் கூடு கட்டிய மரங்களில் வந்து அடங்குகின்றன. ஒரு பறவை மிக விரைவாகப் பறந்து வருகின்றது; அதன் அலகில் உணவு இருக்கின்றது; அந்த வேகத்தில் அதனைக் கைவிடாமல் பற்றிக் கொண்டு தன்னுடைய கூட்டிற்கு வந்து சேரும்போது தாயை எதிர்நோக்கி நிற்கும் குஞ்சு களிக்கின்றது. அது தன் வாயைத் திறக்கும்போது தாய்ப் பறவை தான் கொணர்ந்த உணவை அதன் உள் வாயிற் செருகுகின்றது. அதனை விழுங்க வேண்டும் என்ற அறிவு வராத அவ்வளவு இளைய குஞ்சு போலும்!
            இங்ஙனம் பல பறவைகள் தத்தம் கூடு வந்தடைய, வௌவாலோ பழுத்த மரங்களைத் தேடிப் புறப்படுகின்றது. காடுகளில் மான் தன் பிணையோடு புதர்களில் மறைந்தொடுங்குகின்றது. யானை மலை முழைஞ்சுகளில் ஒடுங்குகின்றது. புலிதன்னுடைய ஆட்சிக் காலம் வந்ததாக அறிந்து முழங்குகின்றது.

   இக்காலத்தில் தலைவரைப் பிரிந்த மகளிர் காம நோய் மேலிட்டு வருந்துவதைப் பல்வேறு வகையில் புலவர்கள் சுவைபடப் புலப்படுத்துகின்றனர். தலைவியர் மாலைக் காலத்தை இகழ்வதும், மகளிர் விளக்கேற்றுவதும், விருந்தினரை உண்பதற்கு உள்ளே புகச்செய்து வாயிலைச் சாத்துவதும் இம்மாலைக் காலத்தில் நிகழ்வன.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...