புதன், 29 பிப்ரவரி, 2012

ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள்- அறிமுக விழா 25.02.2012

       சிவகாசி, ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரித் தமிழியல் துறையில் முனைவர் ஆ.மணி எழுதிய ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் என்ற நூலின் அறிமுக விழா 25.02.2012 அன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் கண்மணி அவர்கள் நூல் வெளியீடு ஒரு சுகப்பிரசவம் போன்றது என்பதை எடுத்துரைத்தார். அக்கல்லூரியின் துணைப் பேராசிரியர் முனைவர் பரமசிவம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். துணைப் பேராசிரியர் நவநீதக் கிருஷ்ணண் நூல் மதிப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் ஆங்கிலத்துறையில் பணியாற்றித் தற்போது காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் க. சத்யசாய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார். 

    சிறப்புரையும் ஏற்புரையும் ஆற்றிய முனைவர் ஆ.மணி தம் ஏற்புரையில், தம்முடைய ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் என்ற நூல்  அக்கல்லூரியின் செயலர் திருமிகு அ.பா. செல்வராசன் அவர்களுக்கு நன்றி வெளிப்பாடாக ஆக்கப்பட்டது ஏன்? என்பதை விளக்கினார். தமிழுக்காக, தமிழ்நிகழ்ச்சிகளுக்காக அவர் வாரி வழங்கிய வள்ளன்மையை நினைவு கூர்ந்தே இந்நூல் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்ட உண்மையையும், தமிழியல் துறையில் மட்டும் ஆண்டுக்கு 40 நிகழ்ச்சிகள் நடத்தியதையும், முத்தமிழ் விழா நடத்த நாளொன்றுக்கு ஓரிலக்கம் வழங்கிய செயலரின் தமிழன்பையும், தாம் துறைத் தலைவராக இருந்த காலத்தில் தமிழ் முதுகலை வகுப்புத் தொடங்கச் செயலர் அவர்கள் ஆணை வழங்கியதையும், தமிழ் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் ரூ.1000 குறைத்ததையும் எடுத்துரைத்த ஆ.மணி இனி அக்கல்லூரியில் இளமுனைவர் (எம்.பில்.), முனைவர்ப் பட்ட ஆய்வுகள் தொடக்குவதற்குச் செயலரும் முதல்வரும் ஆவன செய்ய வேண்டும் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தொடக்கப்பட்ட பதிப்புத்துறை பழந்தமிழ்ப் பதிப்புக்களைச் செம்பதிப்புக்களாக வெளியிடும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், குறுந்தொகை ஒரு புதுப்பார்வை என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிப் பொறுப்பாளர் துணைப் பேராசிரியர் செந்தில்நாதன் நன்றிகூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


முனைவர் ஆ.மணியின் சிறப்புரை: குறுந்தொகை- ஒரு புதுப்பார்வை. மேடையில் கல்லூரி முதல்வர் முனைவர் கண்மணி அவர்கள்.
கல்லூரியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தல். உறியடித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்குக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் பரிசு வழங்குகின்றார் முனைவர் ஆ.மணி.
நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள்
நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள்


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...