திங்கள், 12 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதலும் தூதும் உயர்ந்தோர்க்கு உரியன

தொல்காப்பிய அகத்திணை இயல்: ஓதலும் தூதும் உயர்ந்தோர்க்கு உரியன

28. அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.    (அகத். 28)

இது   மேற்கூறப்பட்டவற்றுள்  ஓதற்கும்  தூது போதற்கும் உரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.
 
(இ-ள்)     அவற்றுள் -  மேற்கூறப்பட்டவற்றுள்,   ஓதலும் தூதும்-ஓதல் காரணமாகப் பிரியும் பிரிவும், தூதாகிப்  பிரியும்  பிரிவும்   உயர்ந்தோர்மேன  -    நால்வகை  வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும் உரிய.
 
இவர்    ஒழுக்கத்தானும்    குணத்தானும்    செல்வத்தானும்    ஏனையரினும்   உயர்புடையராதலின் உயர்ந்தோர் என்றார். அரசர்தாம் தூதாகியவாறு வாசுதேவனால்1 உணர்க.

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லுச் சிலவே யதற்கே.
ஏணியுஞ் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனனே.”  (புறநா. 305)

இதனுள் பார்ப்பார் தூதாகியவாறு கண்டுகொள்க. (அகத். 28)

குறிப்பு விளக்கம்


1. வசுதேவன் மகன் வாசுதேவன் - கண்ணன்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...