ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை விளக்கம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: கைக்கிளை விளக்கம்

53. காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை யெய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (அகத். 53)

மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): காமம் சாலா இளமையோள்வயின் - காமம் அமையாத இளையாள்மாட்டு, ஏமம் சாலா இடும்பை எய்தி - ஏமம் அமையாத இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் - புகழ்தலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து - தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர்பெறான் சொல்லி இன்புறல் - சொல் எதிர் பெறானாய்த் தானே சொல்லி இன்புறுதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு - பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு - பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு.

'பொருந்தித்தோன்றும் ' என்றதனால் அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? ' காமஞ்சாலா ' என்றதனால் தலைமைக்குக் குற்றம் வராதாயிற்று. ' புல்லித்தோன்றும் ' என்றதனால், புல்லாமற்றோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதாவது - காமஞ்சான்ற தலைமகள் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படுகின்றது [' என்று' என்பது எண்ணிடைச்சொல். ஏகாரம் ஈற்றசை. ]

காமம் சாலா இளமையோள்வயின் கூறியதற்குச் செய்யுள்:

"ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
கொழுநிழல் ஞாழல் முதிரிணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை
சுவல்மிசைத் தாதொடு தாழ அகல்மதி
தீங்கதிர் விட்டது போலமுக னமர்ந்து
ஈங்கே வருவாள் இவள்யார்கொல் ஆங்கேஓர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால்
வேண்டுருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார்
கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற்
பல்கலைச் சில்பூங் கலிங்கத்தள் ஈங்கிதோர்
நல்கூர்ந்தார் செல்வ மகள்;
இவளைச் சொல்லாடிக் காண்பென் தகைத்து;

நல்லாய் கேள்,

ஆய்தூவி அனமென அணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் எழில்நலம்
மாதர்கொள் மான்நோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ?

நுணங்கமைத் திரள்என நுண்இழை யணையென
முழங்குநீர்ப் புணையென அமைந்தநின் தடமென்றோள்
வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க்கு
அணங்காகு மென்பதை அறிதியோ அறியாயோ?

முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப்
பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நிற்கண்டார்
உயிர்வாங்கு மென்பதை உணர்தியோ வுணராயோ ?

என ஆங்கு,

பேதுற்றாய் போலப் பிறரெவ்வம் நீயறியாய்
யாதொன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேளினி
நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமருந் தவறிலர்
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
பறையறைந் தல்லது செல்லற்க என்னா
இறையே தவறுடை யான். " 

(கலித். குறிஞ்சி - 20). (அகத். 53).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...