சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: திணை மயக்கம்

14    திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமை யோரே. (அகத். 14)

இது, மேல் அதிகரிக்கப்பட்ட நிலத்தினானும் காலத்தினானும் ஆகிய திணை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): திணைமயக்குறுதலும் கடிநிலை இல - ஒரு திணைக்கு உரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேரநிற்றலும் கடியப்படாது1 நிலன் ஒருங்கு மயங்குதல் இல் என மொழிப - ஆண்டு நிலன் சேரநிற்றல் இல்லை என்று சொல்லுவர், புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - புலன் நன்கு உணர்ந்த புலமையோர்.

எனவே, காலம் மயங்கும் என்றவாறாயிற்று. அதற்குச் செய்யுள்;

"தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் 2பருவத்தான்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போல்
எல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல் மயங்கிருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருள்மாலை;

பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை உடையையோ நீ;

மன்றிரும் பெண்ணை மடல்சேர் அன்றில்
நன்றறை கொன்றனர் அவரெனக் கலங்கிய
என்துயர் அறிந்தனை நரறியோ எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ;

பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்
இனிவரின் உயருமன் பழியெனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல
இனியசெய் தகன்றாரை உடையையோ நீ;
எனவாங்கு,

அழிந்தயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும்பே துறுதல் களைமதி பெரும
வருந்திய செல்லல்தீர் திறனறி ஒருவன்
மருந்தறை கோடலிற் கொடிதே யாழநின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துக விடினே" (கலி - நெய்.12)

எனவரும். [முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.]. (அகத். 14).

குறிப்பு விளக்கம்

1. ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார். ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும் கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு; திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின்.


2.(மேற்கோட் பாடவேறுபாடு): 2. பருவத்தாற்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...