சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற்குரியோர்

தொல்காப்பிய அகத்திணை இயல்: அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற்குரியோர்

25. 1அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்
கடிவரை இலபுறத் தென்மனார் புலவர். (அகத். 25)

இது, நடுவணைந் திணைக்குரிய தலைமக்களைக் கூறி, அதன் புறத்த வாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் - அடித்தொழில் செய்வார் பக்கத்தினும், வினைசெய்வார் பக்கத்தினும் கடிவரைஇல் (மேற் சொல்லப்பட்ட புணர்தல் முதலான பொருளைக் கூறல்) கடிந்து நீக்கும் நிலைமையில்லை, புறத்து என்மனார் புலவர் - ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கண் என்று சொல்வர் புலவர்.

'புணர்தல் முதலான பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது.'வினை செய்வார்' என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க.இவர் அகத்திணைக்கு உரியல்லரோ வெனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடையராகலானும். குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் எனபதனானும், இவர் புறப்பொருட்குரியராயினார் என்க. எனவே, இவ்வெழுவகைத் திணையும் அகம் புறம் என இருவகையாயின.

என்நோற் றனைகொல்லோ,
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்குருச் 2சுருங்கி,
இயலுவாய் நின்னொடு உசாவுவென் நின்றீத்தை;
அன்னையோ,   காண்டகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான்
ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று;
மாண்ட,   எறித்த படைபோல முடங்கி மடங்கி
நெறித்துவிட்டன்ன நிறையோரால் என்னைப்
பொறுக்கல்லா நோய்செய்தாய் பொறீஇ 3நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டென் னுயிர்;
குறிப்புக்காண்வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன
கல்லாக்குறள கடும்பகல் வந்தெம்மை
இல்லத்து வாவென மெய்கொளீஇ 4எல்லாநின்
பெண்டிர் உளர்மன்னோ கூறு;
நல்லாய்கேள்,  
உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லின்நெஞ் சூன்றும் புறம்புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ
பக்கத்துப் புல்லச் சிறிது;
போசீத்தை,     மக்கண் முரியேநீ மாறினித் தொக்க
மரக்கோட்டஞ் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல
நிரப்பமில் யாக்கை தழீஇயின ரெம்மைப்
புரப்பேமென்பாரும் பலராற் பரத்தையன்
பக்கத்துப் புல்லீயா யென்னுமாற்றொக்க
உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின்
இழிந்ததோ கூனின் பிறப்பு;
கழிந்தாங்கே,   யாம்வீழ்து மென்றுதன் பின்செலவு முற்றியாக்
கூனி குழையுங் குழைவுகாண்;
யாமை,    எடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி,
யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங்
காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச்
சாமனார் தம்முன் செலவு காண்க5
ஓஒகாண், நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணாம்
உசாவுவங் கோனடி தொட்டேன்;
ஆங்காகசாயலின் மார்ப அடங்கினேன் ஏஎ
பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டார் நகாஅமை வேண்டுவல்
தண்டாத் தகடுருவ வேறாகக் காவின்கீழ்
போதர் அகடாரப் புல்லி முயங்குவேம்
துகடீர்பு காட்சி அவையத்தார் ஓலை
முகடுகாப்பு யாத்துவிட்டாங்கு." (கலி.மரு.29)

இதனுள் ஒருவரையொருவர் இழித்துக் கூறினமையான் அடியார் என்பதூஉம் மிக்க காமத்தின் வேறுபட்டு வருதலாற் பெருந்திணைப்பாற்படும் என்பதூஉம் கண்டு கொள்க; இதுதானே கைக்கிளைக்கும் உதாரணமாம். வினைவலர் மாட்டு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (அகத். 25).

குறிப்பு விளக்கம்

1. 'அடியோர்' எனவே இருபால் தலைமக்களும் அடங்கிற்று.'கடிவரையில' என்றதனால் அவருள் பரத்தையரும் உளரென்று கொள்க. (நச்சி.)(தொல்.பொருள்.23.).

(பா.வே.): 2. ஈங்குச்.

3. போறி.

4. கைகொளிய.


5. காண்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...