தொல்காப்பிய
அகத்திணை இயல்: சுட்டி ஒருவர் பெயர் கூறல் பெறார்
57.மக்கள் நுதலிய1 அகன்ஐந் திணையும்
சுட்டிஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்.
(அகத்.57)
இது, நடுவணைந்திணைக்குரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
(இதன்
பொருள்): அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும் - அகத் திணையுள் கைக்கிளை
பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி
மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் என்று
சொல்லப்பட்ட ஐந்து பொருண்மையும், சுட்டி ஒருவர் பெயர்
கொளப்பெறார் (அவ்வைந்திணைக் கண்ணும் தலை மகனாகப் புலனெறி வழக்கம் செய்ய வேண்டின்)
நாடன் ஊரன் சேர்ப்பன் என்னும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகி வரும் பெயர்
கொள்ளப்பெறார் புலவர். (அகத். 57).
குறிப்பு விளக்கம்
1.'மக்கள் நுதலிய'
என்பதனானே மக்கள் அல்லாத தேவரும் நரகரும் தலைவராகக் கூறப்படார்
எனவும் 'அகன் ஐந்திணையும்' என்றதனானே
கைக்கிளையும் பெருந்திணையும் சுட்டியொருவர் பெயர்கொண்டும் கொள்ளாதும் வருமெனவுங்
கொள்க. (நச்சி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக