ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பாடல் சான்ற புலனெறி விளக்கம்

தொல்காப்பிய அகத்திணை இயல்: பாடல் சான்ற புலனெறி விளக்கம்

56.நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்1
உரிய தாகும் என்மனார் புலவர். (அகத். 56)

இதுவும் அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): நாடக வழக்காவது , சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் . அஃதாவது செல்வத்தானும் , குலத்தானும் ஒழுக்கத்தானும் , அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும் , அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும் , பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் , பிறவும் இந்நிகரனவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல் .

உலகியல் வழக்காவது , உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது.

பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது , இவ்விருவகையானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள்.

கலியே பரிபாட்டு ஆஇருபாவினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது , கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவிலும் உரிமையுடைத்தாம் என்று உரைப்பர் புலவர் என்றவாறு .

எனவே இவை இன்றியமையாதன என்றவாறு . ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதாராயினர் . புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின் , அது நாடக வழக்கம் அன்றாயிற்று. (அகத். 56).

குறிப்பு விளக்கம்

(பாடம் )1.பாங்கினும் .


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...