சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல் : பாலைக்கு கூடுதல் பருவம்

தொல்காப்பிய அகத்திணை இயல் : பாலைக்கு கூடுதல் பருவம்

12    பின்பனி தானும் உரித்தென மொழிப. (அகத்.12)

இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இதன் பொருள்): பின்பனியும் உரித்து என மொழிப - பின் பனிக்காலமும் உரித்து என்று கூறுப(பாலைக்கு).1

இது வேறோதினமையான், வேனில்போலச் சிறப்பு இன்றெனக் கொள்க. பின்பனியாவது மாசித் திங்களும் பங்குனித் திங்களும்.

அஃதற்றாக, இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னையெனின், சிறப்பு நோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின்? முல்லையாகிய நிலனும், வேனிற்காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன. புயல்கள் முழங்கக் கவின்பெறும் ஆகலின், அதற்கு அது சிறந்ததாம். மாலைப்பொழுது இந் நிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலருங்காலம் ஆதலானும், அந் நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிரை வருங் காலமாதலானும், ஆண்டுத் தனியிருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின், அதுவும் சிறந்தது ஆயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் களவிற் புணர்ச்சி பொருளாதலின், அப்புணர்ச்சிக்குத் தனி இடம் வேண்டுமன்றே, அது கூதிர்காலத்துப் பகலும் இரவும் நுண்துளி சிதறி இயங்குவார் இலராம் ஆதலான். ஆண்டுத் தனிப்படல் எளிதாகலின், அதற்கு அது சிறந்தது. நடுநாள் யாமமும் அவ்வாறாகலின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ்சார்ந்த இடமாதலான், ஆண்டு உறைவார் மேன்மக்களாதலின், அவர் பரத்தையிற் பிரிவுழி அம் மனையகத்து உறைந்தமை பிறர் அறியாமை மறைத்தல் வேண்டி வைகறைக்கண் தம்மனையகத்துப் பெயரும்வழி, ஆண்டு மனைவி ஊடலுற்றுச் சார்கிலளாமாதலால், அவை அந்நிலத்திற்குச் சிறந்தன. நெய்தற்குப் பெரும் பான்மையும் இரக்கம் பொருளாதலின், தனிமையுற்று இரங்குவார்க்குப் பகற்பொழுதினும் இராப்பொழுது மிகுமாதலின், அப் பொழுது வருதற்கேதுவாகிய எற்பாடு கண்டார் இனி வருவது மாலையென வருத்த முறுதலின், அதற்கு அது சிறந்தது என்க.

பாலைப்பொருளாவது, பிரிவு. அப் பிரிவின்கண் தலைமகற்கு வருத்தம் உறும் என்று தலைமகள் கவலுங்கால் நிழலும் நீரும் இல்லாத வழிஏகினார் எனவும் கவலுமாகலின், அதற்கு அது சிறந்தது என்க. [தான் என்பது அசை.] (அகத்.12).

குறிப்பு விளக்கம்


1. "பின்பனிக்கு நண்பகல் துன்பஞ்செய்யா தென்பதூஉம், அதற்குச் சிறுபொழுது வரைவில என்பதூஉம் கூறிற்று." (நச்சி.)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...